கடந்த 2023ம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், 2ம் கட்ட போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் 4 நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
இந்நேரம் 2ம் கட்ட போர் நிறுத்தம் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் செய்யும் தாமதம் காரணமாக மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் எழுந்திருக்கிறது.
இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர் எலி கோஹன் நிபந்தனைகள் குறித்து கூறுகையில், “நாங்கள் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் 4 நிபந்தனைகள் இருக்கின்றன.
1. காசாவிலிருந்து ஹமாஸை வெளியேற்றுதல்
2. அனைத்து கைதிகளையும் விடுவித்தல்
3. காசாவை ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வேண்டும்
4. காசா முழுமையாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்
இந்த 4 நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே போர் நிறுத்தம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்” என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இவை நடைமுறை சாத்தியமற்ற நிபந்தனைகளாகும். காசா என்பது பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி. இந்த பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழ வேண்டும் என்று ஹமாஸ் விரும்புகிறது. இப்படி இருக்கையில் ஹமாஸை மட்டும் அலேக்காக வெளியேற்றுவது என்பது, பாலஸ்தீனர்களுக்கு போடப்படும் ஸ்கெட்ச்.
இந்த போருக்கான காரணமே, இஸ்ரேலின் ஆதிக்கம் இருக்க கூடாது என்பதுதான். ஹமாஸ் என்பது பாலஸ்தீன மக்களுக்கான விடுதலை அமைப்பாகும். அப்படி இருக்கையில், ஹமாஸை வெளியேற்றுவது காசாவை வெளிப்படையாகவே இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்வதற்கான ஏற்பாடுதான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். 2வது கோரிக்கையை எடுத்துக்கொண்டால், காசா கைதிகளை விடுவிக்க தயாராக இருக்கிறது. ஆனால் பதிலுக்கு இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லாமல் ஒரு தரப்பு மட்டுமே கைதிகளை விடுக்க கோருவது எந்த விதத்தில் நியாயம்? என்று பலரும் கேட்கின்றனர். அதேபோல, காசாவை ஆயுதமற்ற பகுதியாக மாற்ற வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. பதிலுக்கு, இஸ்ரேல் எப்போது ஆயுதமற்ற பகுதியாக மாறும்? என்பது கேள்வியாக இருக்கிறது. இஸ்ரேலிடம் இல்லாத ஆயுதங்களே கிடையாது. போரில் கொல்லப்பட்ட 46,000 பேர்தான் இதற்கு சாட்சி. எனவே இரண்டு தரப்பும் ஆயுதங்கள் இல்லாமல் அரசியல் களத்தில் நின்று தங்கள் தரப்பு நியாயங்களுக்காக போராட வேண்டும்.
அதேபோல கடைசி கோரிக்கை ஒருதலைப்பட்சமானது என்று எல்லோருக்குமே தெரியும். பாலஸ்தீனத்தை இத்தனை ஆண்டுகளாக இஸ்ரேல் அடக்கி வைத்திருந்தது. இந்த அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியைதான் ஹமாஸ் செய்து வருகிறது. ஆனால் ஹமாஸை காரணம் காட்டி, காசாவை சொந்தம் கொண்டாட நினைப்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரானது என பலரும் கூறுகின்றனர். ஆக இப்படியான வேலைக்கு ஆகாத 4 கோரிக்கைகளை முன்வைத்து, ஹமாஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லி போரை தொடர்வதுதான் இஸ்ரேலின் திட்டமா? இந்த திட்டத்திற்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சப்போர்ட்டா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. இந்த விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே! இஸ்ரேலின் கோரிக்கை சரியா? தவறா? கீழே கொடுக்கப்பட்டுள்ள Poll-ல் உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.