மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் திருப்பெரும்புதூர் வேட்பாளர், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவையும், காஞ்சிபுரம் வேட்பாளர் செல்வத்தையும் அறிமுகப்படுத்தி இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.திருப்பெரும்புதூர் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். பாலுவை உங்களுக்கு நான் அறிமுகம் செய்யத் தேவையில்லை. 1986 முதல் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர்! 17 வயதில் தீவிர அரசியலுக்குள் நுழைந்து, இன்று வரை, ஒரே கொடி! ஒரே இயக்கம்! ஒரே தலைமை! என்று பாதை மாறாத பயணமாகத் தனது கொள்கைப் பயணத்தை அமைத்துக் கொண்டவர். மூன்று முறை ஒன்றிய அமைச்சராகப் பதவியேற்று 12 ஆண்டுகள் இருந்துள்ளார். அவர் சாதனைகளைச் சொல்ல எனக்கு நேரம் போதாது, அதை அவரே புத்தகமாகப் போட்டிருக்கிறார். அத்தகைய பாலுவை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டியது உங்கள் கடமை! நண்பர் டி.ஆர்.பாலுவுக்குத் திருப்பெரும்புதூர் தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
Please follow and like us:
